காலை 8.10 மணி
நேரம் சரிபார்த்து
நிலையத்தின் முகப்பு தாண்டி
மெல்ல நகரும் குமரன் பேருந்து...
உன்
அவசர வருகையை பார்த்ததும்
உனக்காக ஒரு நிமிடம்
தன் பயணம் ரத்தாக்கி
நின்றது பேருந்து...
சுவாசிக்கும் சிலை
சுடிதார் தேவதை
நிம்மதி மூச்சுடன்
உள்ளே வந்தாய் நீ...
நான்காம் இருக்கை
நடைபாதை ஓரம்
தினசரி பயணி நான்,
என்னருகே நீ,
உன்
மார்போடு புத்தகம்...
சக பயணிகளின் கண்கள்
ஒரு முறை உனை
தீண்டத்தான் செய்தது,
என் கண்களும்...
ஒவ்வொரு நாளும்
உனைக்காணும் பாக்கியம்
நீயும்
தினசரி பயணியானாய்...
தினசரி பயணத்தில்
பார்த்ததும் சிறு புன்னகையோடு
தொடர்ந்தது நம் பயணம்...
ஒரு
சுபமுகூர்த்த தினம்
மூச்சுத்திணறும் பயணிகள் கூட்டம்
தடுமாறிய நீ
சிறு உதவி கேட்ட உன் உதடுகள்
அதற்காக காத்திருந்த என் கைகள்
உனைப்பிரிந்த வருத்தத்தில்
என் மடியில் உன் புத்தகங்கள்...
பயணம் முடித்து
உதிரும் பயணிகள்
நன்றி சொல்லியபடி
நமக்குள் அறிமுகம்
தொடங்கி வைத்தாய் நீ...
என்
பெயர் ‘திவ்யப்பிரியா’ - கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி...
நான்
‘கார்த்தி’ - தனியார் நிறுவன தகவல் தொடர்பாளன்....
அறிமுக பயண வளர்ச்சியில்
கடவுள்,உலகம்,தாமரை,
அரசியல்,விஞ்ஞானம்,சினிமா
எதுவெதுவோ நம்
விவாத மேடையில் வந்துபோயின...
மொட்டு பூவாகும் மணித்துளியில்
நமக்குள்
நட்பு காதலானது...
நானும் கவிஞனானேன்
நீ பேசும் வார்த்தைகள்
என்
கவிதை வரிகளாயின...
உன்
என்
விடுமுறை நாட்களில்
ஒரு பயணச்சீட்டில் இருவர் பயணம்
எனக்குள் நீ
உனக்குள் நான்...
ஒரு
ஞாயிற்றுக்கிழமை
மதிய உணவு
உன்
எதார்த்த பறிமாற்றம்
என் தங்கையோடு - நீ
கொண்ட தோழமை
என் தம்பியோடு - நீ
காட்டிய அக்கறை
என்
வீட்டாரின் மனதுக்குள்
அனுமதியின்றி உள்ளே வந்தாய்...
நம்
காதல் அலைவரிசை
இரு வீட்டாரின்
காதுகளுக்கும் எட்டியது
பெற்றோர் வகுப்பறை ஆசிரியர் ஆயினர்
அச்சுறுத்தலும் அறிவுறையும் இலவச கல்வியாயின...
உன்
அண்ணனின் அடாவடி அதட்டல்
ஏளன வார்த்தை
கேட்ட மனது கலங்கவில்லை
தீர்க்கமனதோடு பிரிந்தோம்
மீண்டும் சந்திக்கும்வரை...
இரும்பு இதயத்தோடு
லட்சியம் நோக்கி
நம் பயணம்
பகுதிநேர படிப்பில் - என்
பதவி உயர்வு - உன்
கல்லூரி படிப்பின் கௌரவத்தேர்ச்சி...
அகிம்சை போராட்டத்தில்
நம்
காதல் உணர்ந்த பெற்றோர்
பச்சைக்க்கொடியசைக்க
மாலை மாற்றி தொடங்கியது
நம்
வாழ்க்கை பயணம்........
- கார்த்திகண்ணு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக